ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தவர்கள் எல்லோரும் சிகரங்களை தொடவேண்டும்.... உயரங்களை எட்டிப் பிடிக்க வேண்டும் என வாழ்த்தினார்கள்.
வெற்றியின் உச்சத்தை அடையவேண்டும் என்ற எண்ணத்தில், அப்படிபட்ட உந்து சக்தியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி வாழ்த்துகிறார்கள். இந்த வாழ்த்துகளானது நம்முடைய மனதில் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும், அப்போது தான் இந்த வாழ்த்துகளின் பலன் கிடைக்கும்.
"உன்னால் முடியும் தம்பி தம்பி அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி"
கவிஞர் வைரமுத்து அவர்களின் வரிகளில் வரும் இந்த திரைப்பட பாடலும் இதையே உணர்த்துகின்றன.
திருச்சி மலைக்கோட்டை உயரத்தில் நின்று கொண்டு பேசுகிறார், "நான் உயரத்தில் நிற்கிறேன், இப்போது என்னால் பேச முடியாது " என்று.
டெலிபோன் டவரில் உயரத்தில் நின்று வேலை செய்து கொண்டிருக்கும் ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு செல்போனில் பேசுகிறார்,"நான் உயரத்தில் இருக்கிறேன் " என்று.
இருபது மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில், எட்டாவது மாடியில் துப்பரவு பணி செய்து கொண்டிருப்பவர் பேசுகிறார், "நான் உயரத்தில் இருக்கிறேன் "என்று.
இவர்கள் அனைவரும் குறிப்பிடுவது
போல் இவையெல்லாம் உண்மையில் உயரங்களா?
அன்னை தெரசாவும், டாக்டர்.அப்துல் கலாமும் எந்த மாடியில் நின்றார்கள். தன் கருமமே கண்ணாக இருந்தார்கள். அதனால் தான் மக்கள் மனம் என்னும் தொட்டுவிட முடியாத உயரத்தில் இன்னும் இருக்கிறார்கள்.
உழைப்பால் உயர்ந்த வி.ஜி.பி.பன்னீர்தாஸ் சகோதரர்கள், வசந்த்&கோ நிறுவனர் வசந்தகுமார் அவர்கள், இதுபோல் இன்னும் எத்தனையோ பேர் சொல்லிக்கொண்டே போகலாம்.
வெற்றி இல்லாத வாழ்க்கை என்பது பிள்ளை இல்லாத வீடு போலாகும். அலை இல்லாத கடல் போலாகும். சுவாரசியம் இல்லாமல் போய் விடும்.ஒவ்வொரு நாளும் வெற்றியை தக்க வைத்து கொண்டே இருக்க வேண்டும். நேற்றைய வெற்றி பூரணமாவது, இன்று வருகிற புது வெற்றியினால் தான். வெற்றிக்காக போராடுவோம். சரித்திரம் நம்மை திரும்பி பார்க்கட்டும். வாழ்க்கையில் தினமும் சிகரத்தை தொடுவோம். சிகரங்களை தொடுவதையே வாழ்க்கையாக்க பழகிக்கொள்வோம். ஒவ்வொரு நாளும் இனிய நாளாக அமையட்டும்.
https://youtu.be/VpW1P5dCw9s